Monday, January 3, 2011

மனிதனிடம் சிங்கம் கொண்ட பாசம்.

நான் படித்ததில் என்னை கவர்ந்த இந்த வரியினை உங்களுக்கு தெரிவிக்கிறேன். இதோ நீங்களும் படித்து மகிழுங்கள்.

நான் என் மகன் வீட்டில் ஒரு வீடியோ க்லிப் பார்த்தேன். ஒரு மிருகக்காட்சி
சாலையில் கூண்டிற்குள்ளிருந்த சிங்கம் வேடிக்கை பார்க்க வந்த வாலிபனை
கட்டித்தழுவி கொஞ்சிக்கொண்டிருந்தது. அந்த சிங்கத்தின் உயிரை 6
வருடங்களுக்கு முன் காப்பற்றியிருக்கிறான் அந்த வாலிபன். 6
வருடங்களுக்குப் பிறகு இப்பொழுதுதான் சந்திப்பு ஏற்பட்டிருக்கிறது.
அந்தச் சிங்கம் அவனை அடையாளம் கண்டு கொண்டு தன் நன்றியை அவ்விதம்
வெளிப்படுத்தியுள்ளது.

இதைப் பார்த்ததும் என் குடும்பத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள்
ஞாபகத்திற்கு வந்தது.

எங்கள் வீட்டில் ஒரு நாய் வளர்த்து வந்தோம். அதன் பெயர் ஜிம்மி.
அரக்கோணத்தில் என் தகப்பனார் பணியாற்றிய பொழுது ஜிம்மி தொலைந்துவிட்டது.
அதன் பின் மாற்றலாகி வேறு ஊருக்குச் சென்று விட்டோம். மூன்று
வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் அரக்கோணத்திற்கே மாற்றலாகி வந்தோம்.
ஒருநாள், எங்கள் வீட்டில் வேலை பார்த்து வந்த அம்மாளுடன் காஞ்சீபுரம்
சென்றேன். நான் முதலில் திரும்பிவிட்டேன். அந்த அம்மாள் இரண்டு நாட்கள்
கழித்து வந்தார்கள்.அவர் கூட ஒரு நாயும் வந்தது. வீட்டிற்குச் சற்று
தூரத்தில் வரும்பொழுதே அவர்களை என் தாயார் பார்த்துவிட்டார்கள். அந்த
அம்மாளுடன் வரும் நாய் தொலைந்துபோன ஜிம்மி மாதிரி உள்ளதே என்று நினைத்து
"ஜிம்மி" என்று குரல் கொடுக்க, அது பாய்ந்து ஒடிவந்து என் தாயார் மீது
தாவி முகமெல்லாம் நக்கி சுற்றிச் சுற்றி வந்து தாவி தாவி தன்
சந்தோஷத்தைக் காண்பித்தது என் கண் முன் வந்து நின்றது. அந்த அம்மாள்
கூறியது இன்னும் வியப்பாக இருந்தது. காஞ்சீபுரத்தில் வண்டி ஏறியதும் இந்த
நாயும் பக்கத்தில் வந்து காலடியில் படுத்துக்கொண்டதாம். அரக்கோணத்தில்
இறங்கியதும் அந்த நாயும் கூடவே வந்ததாம். என்னை அந்த அம்மாளுடன்
காஞ்சீபுரத்தில் பார்த்திருக்கவேண்டும். என்னைத் தவற விட்டு விட்டது.
அந்த அம்மாளுடன் வந்திருக்கிறது. இப்படித்தான் நடந்திருக்க வேண்டும்
என்று நாங்கள் ஊகித்தோம். அதன் பிறகு கடைசி காலம் வரை எங்களுடன்
இருந்தது.

மற்று மொரு சம்பவம்
வீட்டில் ஒரு குரங்கு குட்டி வளர்த்து வந்தார் என் தாயார். அது கொஞ்சம்
வளர்ந்ததும் அதை வளர்ப்பது சிரமம் என்று பலர் சொல்ல அதை ஒரு
குரங்காட்டிக்குக் கொடுத்து விட்டார். இது நடந்து ஒரு வருடம்
சென்றிருக்கும். சென்னையிலிருந்து ரெயிலில் ஓங்கோலுக்குச் சென்று
கொண்டிருந்தார்( அச்சமயம் என் தகப்பனாருக்கு ஓங்கோலில் வேலை). ஒரு
ஸ்டேஷனில் வண்டி நின்று கொண்டிருக்கும்பொழுது, ஒரு குரங்கு வண்டி ஜன்னல்
மீது தாவி கீச் கீச் என்று கத்திக்கொண்டு (சந்தோஷத்தில்) ஜன்னல் ஓரம்
உட்கார்ந்திருந்த என் தாயாரின் கன்னத்தைத் தடவிற்று. என் தாயார் பயந்து
நகர்ந்து கொண்டார். அப்பொழுது, குரங்காட்டி ஓடி வந்து என் தாயாரை
அடையாளங் கண்டு, "அம்மா! இது நீங்கள் எனக்குக் கொடுத்த குரங்குதான்
அம்மா! உங்களைப் பார்த்ததும் ஒடி வந்துவிட்டது என்றான். அதன் பிறகு
தைரியமாய் அதை அன்பாகத் தடவிக் கொடுத்தாள்.

சில மனிதர்கள் காரியமானதும் மறந்து விடுகிறார்கள். ஆனால், மிருகங்கள்
எத்தனை வருடங்கள் கழிந்தாலும் தன்னை வளர்த்தவர்களை மறப்பதில்லை..

கமெண்ட் இருந்தால் தெரிவிக்கவும்.

5 comments:

  1. இரண்டும் சுவையான நிகழ்ச்சி. என்னைப்போல் நீங்களும் எல்லா உயிர்களையும் நேசிப்பவர். எல்லோராலும் அது முடியாது.மனிதனுக்கும் மிருகத்திற்க்கும் உள்ள வித்தியாசம் அந்த ஆறாவது அறிவுதான்.அதுதான் பிரச்சினையும்.மிருகங்களுக்கு சுயநலம் கிடையாது. தின்ன சோற்றுக்கு நன்றி காட்டும். அற்ப மனித இனம் அதிலும் லாப நஷ்டம் பார்க்கும்.நன்றி.

    ReplyDelete
  2. இது உண்மையிலேயே நெகிழ்ச்சியான நிகழ்வு தான்.

    ReplyDelete
  3. நெகிழ வைத்த பதிவு

    ReplyDelete
  4. // சில மனிதர்கள் காரியமானதும் மறந்து விடுகிறார்கள். ஆனால், மிருகங்கள்
    எத்தனை வருடங்கள் கழிந்தாலும் தன்னை வளர்த்தவர்களை மறப்பதில்லை..//

    இது 100$ சதவிதம் உண்மை.

    உங்கள் பதிவு அருமை. நன்றி நன்றி

    ReplyDelete
  5. "makkalai vida maakkale mel"- ena enna thondrugirathu!!!

    Heart Touching events by Post!

    ReplyDelete