Friday, October 1, 2010

மனம் விட்டுப் பேசலாமா?

நீங்கள் உங்களுக்குப் பழக்கமானவரிடத்தில் எல்லா விஷயங்களையும் மனம்விட்டுப் பேசுகிறீர்கள்.

நடந்த உண்மைகளை அப்படியே யதார்த்தமாகச் சொல்கிறீர்கள்!

எல்லா விஷயங்களையும் மற்றவர்களிடத்தில் சொல்லலாமா?

இப்படி மனம் விட்டுச் சொல்வதால் உங்களுக்கு ஆறுதல் கிடைக்குமா?

கடுகளவு ஆறுதல்கூடக் கிடைக்காது.

எனவே ஒருபோதும் எவரிடமும் மனம் திறந்து பேசாதீர்கள்.

சில விஷயங்களைப் பிறரிடம் சொல்லவே கூடாது.

பணம் கொடுக்கல் வாங்கல், வீட்டுப் பிரச்னை, தாம்பத்ய அனுபவம், செய்த தானம், அடைந்த புகழ், ஏற்பட்ட அவமானங்கள் ஆகியவற்றைப் பிறரிடம் சொல்லவே கூடாது.

இதை மற்றவர்களிடத்தில் சொன்னால், நீங்கள் பலவீனர்களாகி விடுவீர்கள்.

உங்களுடைய பலவீனம் மற்றவர்களுக்குத் தெரிந்தால் உங்கள் பலத்தை நீங்கள் இழப்பதுடன் அவர்களுடைய அடக்குமுறைக்கும் ஆளாகிவிடுவீர்கள்.

உங்களுக்குக் கிடைக்கும் வருமானம், புகழ் ஆகியவற்றைக் கேட்டு மற்றவர்கள் பொறாமை கொள்வார்கள்.

"அடேங்கப்பா!... இவருக்கு மாதந்தோறும் இவ்வளவு வருமானமா? மக்கள் மத்தியில் இவ்வளவு செல்வாக்கா?'' என்று ஆதங்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டே இருப்பார்கள்.

அவர்களின பார்வை உங்கள் வாழ்வில் பின்னடைவை ஏற்படுத்திவிடும்.

கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாதல்லவா?

உங்கள் கருத்துகளைப் பிறரிடம் கூறவே கூடாது.

இதனால் உங்கள் பிரச்னைகளின் தீவிரம் கொஞ்சம்கூடக் குறையாது.

எனவே ஒருபோதும் மற்றவர்களிடம் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளாதீர்கள்.

உங்கள் உயிர் நண்பராக இருந்தாலும் சரி, அவரிடத்திலும் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளாதீர்கள்.

அவர் உங்கள் உயிரை வாங்கும் எமனாக மாறிவிடுவார்.

இடுக்கண் களையும் நட்பை இன்று தேடிப்பிடிக்க வேண்டியுள்ளது.

கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.

இதில் பிழையொன்றும் இல்லை.

திருமணத்துக்கு முன்பு தாயிடமும் தந்தையிடமும் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளுங்கள்.

நீங்கள் உங்கள் வாழ்வில் பட்ட அவமானங்கள், துன்பங்கள், உங்களுக்கு ஏற்பட்ட சோதனைகள், உங்களுக்கு உண்டான கேவலங்கள் எதுவாக இருந்தாலும் எல்லாவற்றையும் ஆண்டவனிடம் மனம் திறந்து சொல்லுங்கள்.

உங்களுக்கு மன நிம்மதி உறுதியாகக் கிடைக்கும்.

மன அமைதி என்பது உங்களுக்கு இல்லாமல் போய்விட்டதா?

நல்ல நூல்களைப் படியுங்கள்.

நம்பிக்கை தரும் நூல்களைப் படியுங்கள்.

ஆன்மிகச் சொற்பொழிவுகளைக் கேளுங்கள்.

சான்றோர்களுடைய நல்லுரைகளைக் கேளுங்கள்.

இவைகளால் உங்களுடைய மனம் விவரிக்க முடியாத ஆனந்தத்தை அடையும்.

நீங்கள் வறுமையில் வாடியபோது உங்களுக்கு உதவி செய்ய எவரும் வந்திருக்கமாட்டார்.

ஆனால் நீங்கள் செல்வச் செழிப்புடன் வாழும்போது உங்களை நாடி ஆயிரம் பேர் வருவார்கள்.

உயர்ந்த நட்புடையவர்கள் எப்போதும் மலர்ந்தபடியே உள்ள குவளை மலர்போல இருப்பார்கள்.

ஆனால் கெட்டவர்கள் பகலில் குவிந்து இரவில் மலரும் ஆம்பல் மலர் போல அடிக்கடி மாறுவார்கள்.

ஆதாயம் இருந்தால் மட்டுமே அண்டி வருவார்கள்.

அன்புடையவர்கள் உயர்ந்த நட்புடையவர்களாகவே இருப்பார்கள்.

அவர்கள் எப்போதும் ஒரே தன்மையுடன் பழகும் பண்புடையவர்களாகத் திகழ்வார்கள்.

நற்குடியில் பிறந்தவர்கள் கடமை தவறாமல் காரியங்களைச் செய்வார்கள்.

சமூகத்தில் பெரிதும் புகழப்படுவார்கள்.

கௌரவிக்கப்படுவார்கள்.

எனவே, உயர்ந்த நட்புடையவர், அன்புடையவர், நற்குடியில் பிறந்தவர், நட்புக்காகத் தன்னையே தியாகம் செய்யத் துணிபவர், ஒருவர் பொறை இருவர் நட்பு என்பதைத் தெளிவாக உணர்ந்தவர், சிறந்த குணநலம் உடையவர் ஆகியோர் யார் என்பதைத் தெளிவாக உணர்ந்தவர், சிறந்த குணநலம் உடையவர் ஆகியோர் யார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அவரிடம் நட்புக்கொண்டு, அவரிடம் மனம் விட்டுப் பேசுங்கள்!

இதை விட்டுவிட்டு எல்லோரிடத்திலும் யதார்த்த உணர்வோடு மனம் விட்டுப் பேசாதீர்கள்!

4 comments:

  1. நல்ல கருத்துக்களை நயமாகச் சொல்லி இருக்கிறீர்கள்...
    எப்பொழுதுமே நமக்கென சில விஷயங்கள் ரகசியமாக வைத்திருப்பது நல்லதுதான்...எல்லாவற்றையும் கவிழ்த்துக் கொட்டிவிட்டால்...நம் மரியாதையும் காலியான கூடைதான்

    ReplyDelete