Monday, August 30, 2010

நிஜத்தில் மேக்கப் இல்லாத மனிதர் ரஜினி!-ப்ருத்விராஜ்




நிஜத்திலும் மேக்கப் இல்லாத ஒரே நடிகர் ரஜினிதான். மேக்கப் போடாமல் வெளியில் செல்லும் துணிச்சல் இந்தியாவிலேயே அவர் ஒருவருக்குத்தான் உண்டு என்றார் நடிகர் ப்ருத்விராஜ்.

இது குறித்து ஏஷியாநெட் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

நான் மிக விரும்பும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிதான். திரைக்கு வெளியே எப்போதும் மேக்கப் இன்றி ரஜினியாகவே இருக்க விரும்புகிறார். இருந்தும் வருகிறார்.

தன்னை எந்த நிலையிலும் ரசிக்கும் உண்மையான ரசிகர்களால் அவருக்கு கிடைத்த தைரியம் இது. அவரால் திரைப்படங்கள் மூலம் மக்களிடத்தில் பெற்றுள்ள செல்வாக்கை வேறு எந்த நடிகரும் இதுவரை பெறவில்லை.

சிறு வயதிலேயே எனக்கு மம்முட்டி, மோகன்லாலை தெரியும் ரஜினிக்கு என்னிடத்தில் உள்ள பழக்கத்தை விட மம்முட்டி, மோகன்லாலுக்கு என்னிடம் உள்ள பழக்கம் அதிகம். சிறு வயது முதல் அவர்கள் மடியில் வளர்ந்தவன் நான். ஆனால் அவர்கள் என்னுடைய ஒரு படத்தைக் கூடப் பாராட்டியதில்லை. ஆனால் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் என்ற பெருமைக்குரிய ரஜினி அப்படி இல்லை.

இப்போதும் ஞாபகம் இருக்கிறது. கோழிக்கோட்டில் கார்கி படப்பிடிப்பில் இருந்தேன். காலை 5.30 மணிக்கு உடற்பயிற்சி செய்ய எழுந்தபோது எனது போனில் சென்னை லேன்ட்லைனில் இருந்து 23 மிஸ்டுகால்கள் இருந்தன. காலை நேரத்தில் கூப்பிட வேண்டாம் என்று உடற்பயிற்சிக்கு சென்றேன்.

6.30 மணியளவில் மீண்டும் அதே நம்பரில் இருந்து அழைப்பு வர எடுத்தேன். பேசியவர் நீங்கள் பிருதிவிராஜா என்றார். ஆம் என்றதும் நேரடியாக ரஜினியே பேசினார். 45 நிமிடங்கள் மொழி படத்தின் காட்சிகளை விவரித்து பாராட்டினார். நான் மலைத்து விட்டேன். அப்போதே என் மனதில் ரஜினிக்குள்ள மரியாதை உயர்ந்து விட்டது.

பொது நிகழ்ச்சிகளுக்கு மேக்கப் போடாமல் செல்லும் ஒரே நடிகர் ரஜினிதான். மம்முட்டியோ, மோகன்லாலோ மேக்கப் இன்றி வெளியே வந்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 'சீ' என்றுதான் சொல்வார்கள். மிகப் பெரிய நடிகர்களான அமிதாப்பச்சன், அனில் கபூர், சிரஞ்சீவி போன்றோரும் விக் வைத்து மேக்கப் போட்டுத்தான் வெளியே வருகிறார்கள்.

ஆனால் ரஜினி தனித்துவம் உள்ள மனிதர். பயமில்லாதவர். அவர் மக்களிடத்தில் பெற்றுள்ள செல்வாக்கை வேறு எந்த நடிகராலும் பெற முடியாது என்றார்.

No comments:

Post a Comment