Monday, August 30, 2010

இரகசியம்

எனக்குத் தெரியும்
அங்கே சிதறிய செங்குருதியின்
சொந்தக் காரனை

அவன் பெயர்
காற்றின் அசைவுக்குள்
தவழ்ந்து செல்லாது
அது இரகசியமாய்ப்
பேணப்பட வேண்டிய
உன்னத பெயர்

சிலரின் இதய அறைக்குள் மட்டுமே
அவனுக்கான சடங்குகள்
நடக்கும்

பெற்ற தாயும் அறியாத
பரம இரகசியம்
அவனது விடுதலை வேள்வி

அந்த செங்குருதியின்
சொந்தக் காரனின் பெயர்
எந்த நடுகல்லிலும் இல்லை

மலரும் தமிழீழத்தில்
உரத்து உச்சரிக்கப்படலாம்
அந்த வேங்கையின்
அதிசய சாதனைகள்.

No comments:

Post a Comment